Breaking

Sunday, 28 January 2018

மறியல் செய்த ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் கைது

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசுக் கடந்த 19-ம் தேதி இரவு திடீரென 60 சதவிகிதத்துக்கும் மேல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும் கட்டண உயர்வை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு நேற்று பேருந்துக் கட்டணத்தை சிறிதளவே குறைத்தது. அரசின் கண்துடைப்பு நாடகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 
இந்நிலையில் பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற கோரி சென்னை கொளத்தூரில் இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் இந்த மறியல் போராட்டத்தில் பங்குபெற்றனர். இதேபோன்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வைகோ, திருமாளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்தது. கைதுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் ‘போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment