Breaking

Tuesday, 30 January 2018

இந்தியாவில் இப்படியும் ஒரு முதல்வர்!

சொத்து மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சொத்து மதிப்பு குறைந்துகொண்டுபோகும் அரசியல்வாதி ஒருவரும் இந்தியாவில் உள்ளார் என்கிற ஆச்சர்யத் தகவல் நேற்று கிடைத்துள்ளது. அந்த அரசியல்வாதியின் பெயர் மாணிக் சர்க்கார். திரிபுரா மாநில முதல்வராக 5 முறை இருந்துள்ளார். தற்போது, 6 வது முறையாக மாணிக் சர்க்கார், தான்பூர் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தபோதுதான், சொத்து மதிப்பு குறைந்தது என்ற அபூர்வத் தகவலும் வெளிவந்தது.

1998-ம் ஆண்டு முதல் திரிபுரா முதலமைச்சராக உள்ள மாணிக் சர்க்காருக்கு 2013-ம் ஆண்டு வங்கிக் கணக்கில் ரூ.9,720 இருந்துள்ளது. இந்தத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட அஃப்டவிட்டில் வங்கிக் கணப்பில் ரூ.2,410 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அகர்தாலாவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் மாணிக் சர்க்காருக்கு கணக்கு உள்ளது.
கையிருப்பாக வெறும் ரூ.1,520 மட்டுமே வைத்திருக்கிறார். மாணிக் சர்க்காருக்கு என்று சொந்தமாக மொபைல்போன்கூட இல்லையென்றே அவரின் அஃப்டவிட் சொல்கிறது.

மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி பட்டாச்சர்ஜி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் 20,140 கையில் இருப்பாகவும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் ரூ.12 லட்சம் சேமிப்பாக வைத்துள்ளார். 20 கிராம் தங்க நகை சொந்தமாக உள்ளது. அகர்தலாவில் அரசு வழங்கியுள்ள சிறிய வீட்டில் கணவனும் மனைவியும் வசிக்கின்றனர். முதல்வரின் மனைவியாக இருந்தாலும் பஞ்சாலி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணம் செய்கிறார். மாணிக் சர்க்காருக்கு சகோதரர்களுடன் சேர்ந்து சிறிய நிலம் பரம்பரை சொத்தாக உள்ளது.

முதல்வருக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை மாணிக் சர்க்கார் கட்சிக்கு வழங்கிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி பதிலுக்கு ரூ.10,000 வழங்குகிறது.

No comments:

Post a Comment